Wednesday 16 December 2015

எல்லாமே நம் கையில் - எதற்கும் நேரமில்லை



"லேட்டஸ்டா என்ன சினிமா பார்த்த?" "ஹையோ! சினிமாவா எனக்கு அதுக்கெல்லாம் ஏதுப்பா நேரம்?", "தினமும் வாக்கிங் போறியோ?" "போகனும்னுதான் ஆசை. ஆனா நேரமே கிடைக்க மாட்டேங்குது."
"இன்னிக்கு மழை வரும்னு நியூஸ்ல சொன்னான்."
"பார்த்தா அப்படித்தான் தோணுது. ஆனா நா நியூஸெல்லாம் பாக்கல. நேரம்தான் பிரச்சினை."
"சரி, கையிலதான் ஆண்டிராய்டு போன் வச்சிருக்கியே, அதுல பாத்திருக்கலாமே. ஆமா நீ ஏன் பேஸ்புக், வாட்ஸ் ஆப் எது பக்கமும் வரமாட்டேங்குற?"



"அத ஏன்பா கேக்குற. எல்லாரும் வச்சிருக்காங்க நீயும் வச்சிருந்தாதான் கெத்தா இருக்கும்னு சொல்லி வீட்ல வாங்கிக் கொடுத்தாங்க. சும்மா பேச மட்டும்தான் யூஸ் பண்றேன். வேற எதுவும் பண்றதுல்ல. அதுக்கெல்லாம் ஏது நேரம்னு சொல்ற?
இப்படி நம் அன்றாட வாழ்வில் பலரை சந்தித்திருப்போம். எதற்கெடுத்தாலும் நேரமில்லை, நேரமில்லை, நேரமில்லை. வயிறார சாப்பிட நேரமில்லை, தன் ஆரோக்கியத்தை கவனிக்க நேரமில்லை. எப்பொழுதும் ஒரேப் பாட்டுதான். இதுப்போல மிச்ச நேரம் என்பதே இல்லாமல் ஒவ்வொருவரும் உழைத்துக் கொண்டிருந்தால் நாடு இல்லை குறைந்தபட்சம் அவரது குடும்பமாவது எங்கோப் போயிருக்கும்.
பலரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் இல்லை என மறுக்கவில்லை. ஆனால் மற்ற சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நேரம் ஒதுக்க முடியாதவர்கள் நேரமில்லாதவர்கள் அல்ல. நேரத்தை திட்டமிடத் தெரியாதவர்கள். அவர்கள் தன்னை அறியாமலே ஏதோ ஒரு விஷயத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது மாற்றங்களுக்கு தயாராக இருக்க மாட்டார்கள்.
நமக்கு எவ்வகையில் நேரம் விரயமாகிறது என அறிவது மிகச் சுலபம். நாம் தினமும் தூங்கும் முன்பு ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி அன்றைய பணிகள் அனைத்தையும் நம்மால் முடிக்க முடிந்ததா என யோசிக்க வேண்டும். இதை நாம் நமக்காக, நம் நன்மைக்காக செய்கிறோம். இது யாரையும் திருப்திப் படுத்துவதற்காக அல்ல. 

ஒருவேளை திட்டமிட்ட பணிகள் முடியவில்லை என்றால் எந்த ஒளிவு மறைவு சப்பைக்கட்டுகளும் இன்றி காரணத்தை அலச வேண்டும். அப்படி செய்யும்போது நம் தவறுகள் நமக்கேத் தெரிய வரும். உதாரணத்திற்கு சிலர் கேண்டீனில் நண்பர்களுடன் அரட்டையடிக்க நிறைய நேரம் செலவிடலாம். அல்லது பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் அதிகமாக உலாவலாம். சில இல்லத்தரசிகள் சீரியல்களின் இடைவேளைகளில்தான் சமைப்பதாகக் கூட ஒரு குற்றச்சாட்டு உண்டு. நண்பர்களுடன் அரட்டை, சமூக வலைதளங்களின் பயன்பாடு, டிவி சீரியல் எதையும் தியாகம் செய்ய வேண்டாம். ஆனால் அந்நேரத்தில் எது முக்கியமான வேலை என முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நம் பணிகளின் முக்கியத்துவத்தைப் பட்டியலிட்டே சாதுர்யமாக செயல்படலாம். ஆரம்பத்தில் நண்பர்கள் சற்றுக் கோபப்படுவார்கள். பொறுமையாக விளக்குங்கள். இல்லாவிட்டாலும் உங்கள் வேலைகளில் இருக்கும் முன்னேற்றத்தைப் பார்த்து அவர்களும் உங்கள் வழிக்கே வந்துவிடுவார்கள். டிவி பேஸ்புக் போன்றவை நம் முக்கியப் பணிகளில் குறுக்கிடாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் வேலைகள் சீக்கிரம் முடிந்துவிட்டால் தானாகவே ஓய்வு நேரம் கிடைக்கும். அப்பொழுது டிவி, பேஸ்புக் என ஜமாய்க்கலாம்.

அடுத்ததாக சிலர் புது முயற்சிகள் செய்வதில்லை. ஒரு வேலையை செய்து முடிக்க மாற்று வழி இருந்தாலும் அதை ஏற்க மாட்டார்கள். அதிலிருக்கும் சின்னசின்ன குறைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டு 'இப்படி செஞ்சாதான் எனக்குப் பிடிக்கும்' என வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நேரத்தை மிச்சப்படுத்த மாற்றுவழிகளை யோசியுங்கள். வெற்றியாளர்கள் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரு தீர்வை காண்கிறார்கள். தோல்வியின் நாயகர்கள் ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையை கண்டறிகிறார்கள். யாராவது ஏதேனும் புதிய யோசனைகளை சொன்னால் திறந்த மனதுடன் அதை முயற்சித்துப் பாருங்கள்.

நமக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அதை விட நேரம் முக்கியம். ஏனெனில் பணம் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் நேரம்.....? சில சமயங்களில் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நம் நேரத்தை செலவிட வேண்டும். சில வேளைகளில் நம் பொன்னான நேரத்தை சேமிப்பதற்காக சிறிது பணம் செலவு செய்வதில் தவறொன்றும் இல்லை. அதனால் பணமா நேரமா அந்த நேரத்தில் எதை சேமிக்க வேண்டும் என சமயோசிதமாக முடிவெடுப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் எதையுமே தான் செய்வதே சரி என முன்கூட்டியே முடிவெடுத்து செயல்பட்டால் நமக்கு ஒரு நாளுக்கு 48 மணி நேரம் இருந்தாலும் போதாது. ஆகவே மனம் வையுங்கள். திறந்த மனதுடன் சிந்தியுங்கள். மாற்றங்கள் நிகழும்.

4 comments:

  1. முற்றிலும் உண்மை விஜயா. நேரம் கிடைக்கும் ஆனால் நாம் அதை சரியாக உபயோகபடுத்துவதில்லை. நம் உடலுக்காக, மன நிம்மதிக்காக 1மணி நேரம் கண்டிப்பாக செலவிடனும் . Also we have spend time with our parents, grand parents and children to create and maintain the bonding.

    ReplyDelete
  2. முற்றிலும் உண்மை விஜயா. நேரம் கிடைக்கும் ஆனால் நாம் அதை சரியாக உபயோகபடுத்துவதில்லை. நம் உடலுக்காக, மன நிம்மதிக்காக 1மணி நேரம் கண்டிப்பாக செலவிடனும் . Also we have spend time with our parents, grand parents and children to create and maintain the bonding.

    ReplyDelete