Thursday 24 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 8


பாசுரம் 8



"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

காலை புலர்ந்து விட்டது,கீழ்வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் செல்வதை காண்பாயாக! உன்னை தவிர பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல்லர்களை கொன்றவனை அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை சேவித்தால் அவன் நம் மீது 'ஐயோ' என்றிரங்கி நம் குறைகளை கேட்டு அருள் செய்வான்.

விளக்கம்:

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

No comments:

Post a Comment