Thursday 24 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 9

பாசுரம் 9



"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:


அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.

விளக்கம்:

பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

No comments:

Post a Comment