Tuesday 29 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 11

பாசுரம் 11



"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து, பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள் ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில் திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

விளக்கம்:

கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே! நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

No comments:

Post a Comment