Tuesday 19 January 2016

அடிக்கடி சளி காய்ச்சல் வராமல் தடுக்க



“அவனுக்கு ஆரஞ்சு பழம் கொடுக்காதீங்க. அத சாப்பிட்டா உடனே அவனுக்கு சளி பிடிச்சிக்குது. கூடவே ஜுரம் வேற வந்துடுது. ஸ்கூலுக்கு அடிக்கடி லீவுப் போட்டா அவன் மிஸ் வேற திட்டறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல.” என புலம்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அது ஏனோ பெரும்பாலானோர் ஆரஞ்சு திராட்சை பழங்கள் உண்பதையேத் தவிர்க்கின்றனர். இருமல், நெஞ்சுக்கட்டு வருகிறது என விதவிதமாக காரணங்களை அடுக்குகின்றனர். ஆனால் உண்மையில் அடிக்கடி சளி இருமல் போன்ற தொந்தரவுகள் அண்டாமல் இருக்க இந்த பழங்களை அதிகம் உண்ண வேண்டும்.



“சளி குணமாக ஆரஞ்சு பழமா?” என நீங்கள் அலறுவது கேட்கிறது. சளி இருமல் குணமாக்க ஆரஞ்சு பழத்தில் ஒன்றுமில்லை. ஆனால் அவை அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும் வைட்டமின் சி அதில் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி அதிகம் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் அடிக்கடி வந்துப் போகும் சளி காய்ச்சல் வராது. அப்படியே எப்பொழுதாவது வந்தாலும் அதன் பாதிப்பு அதிகம் இருக்காது.

”அதெல்லாம் சரி. ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிட்டாலே சளி வருகிறதே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” வைட்டமின் சி அதிகம் சேர்த்துக் கொள்ள சொல்லி நான் யாரிடமாவது கூறினால் இந்த கேள்வி தவறாது வரும். நல்ல கேள்வி. இதற்கு பதில் கூறவே ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என முடிவெடுத்தேன்.

என் சிறு வயதில் நானும் எல்லா குழந்தைகளைப் போலவே இதைச் சாப்பிடமாட்டேன், அதைச் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டுதான் இருந்தேன். தினமும் என்னைச் சாப்பிட வைப்பதே என் அம்மாவிற்கு ஒரு பெரும்பாடாய் இருந்தது. அதனால் எனக்கு வழக்கம்போல எப்பொழுதுப் பார்த்தாலும் சளி காய்ச்சல் என அழையா விருந்தாளிகள் அடிக்கடி வந்து தொந்தரவுக் கொடுத்துக்கொண்டிருந்தனர். சற்று வளர்ந்து சுயமாய் சிந்திக்க ஆரம்பித்த சமயம் ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். ஆனால் நோயாளி என்ற முறையில் இல்லாமல் சற்றுப் பரிச்சயமானவர் என்ற முறையில் சந்தித்தேன். அவர் எப்பொழுதும் நாம் உண்ணும் உணவே சிறந்த மருந்து. சரியாக உண்ணப் பழகினோமானால் நோயின்றி வாழலாம் என்ற கருத்துடையவர். அவரிடம் நான் என் அழையா விருந்தாளிகளைப் பற்றிக் கூறினேன். அவரும் வைட்டமின் சி நிறைந்த காய் கனிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதை யார் யாருக்கு கூறினாலும் அடுத்து வருவது மேலேக் குறிப்பிட்ட கேள்வியே அல்லவா? நானும் அதையே கேட்டேன். அதற்கு அவர், முதல்முறை சாப்பிடும்போது சளி வரலாம். இரண்டாம் முறை, ,மூன்றாம் முறை சாப்பிடும்போதும் சளி வரலாம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமானால் அந்த உணவின் பலன்கள் நம் உடலில் வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது சளி காய்ச்சல் வருவது குறையும் என அறிவுரைக் கூறினார்.



அந்த அறிவுரையைத்தான் நானும் என் வாசகர்களுக்கு கூறுவது. ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் சாப்பிட்டால் ஆரம்பத்தில் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனால் அதற்கு அஞ்சி நிறுத்திவிட வேண்டாம். தொடர்ந்து சாப்பிடுங்கள். அதன் நன்மையைப் பெற ஆரம்பித்துவிடுவீர்கள். சாப்பிடாமல் இருந்தாலும் எப்படியும் உங்களுக்கு சளி காய்ச்சல் வரத்தான் போகிறது, அதனால் தைரியமாக சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கும் கொடுங்கள். சாப்பிடாமல் இருந்து வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதற்கு, இந்த பழங்களை சாப்பிட்டு ஓரிரு முறை மட்டும் கஷ்டப்பட்டுவிட்டு பிறகு நன்மையை அனுபவிப்பது மேல் அல்லவா!

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் குளிர்ச்சி வாய்ந்தது. சாப்பிட்டால் சளி இருமல் வந்துவிடும். ஆனால் அது விளையும் காலமோ குளிர்காலம். நவம்பர் முதல் ஜனவரி வரை அதிகம் வளர்கிறது. அதுவே மாம்பழம் சூடு. அதிகம் சாப்பிட்டால் வயிறு வலிக்கும் என அச்சம். ஆனால் அதுவோ நல்ல வெயில்காலத்தில் காய்க்கிறது. ஏன்
இப்படி? ஆரஞ்சு போன்ற பழங்கள் வெயில் காலத்திலும், உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் மாம்பழம் குளிர்காலத்திலும் காய்த்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்!

இப்படி யோசிப்பது நம் அறியாமை. ஆனால், இயற்கை நமக்கு நன்மையே செய்கிறது. குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அதனால் இதுப் போன்ற சளி காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் தாக்கும். அதனால் நம்மைக் காத்துக் கொள்ள வைட்டமின் சி அதிகம் நிறைந்த காய்கனிகள் இக்காலத்தில் விளைகிறது. அதுவே வெயில்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துகிறது. நம் உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறுவதால் நாம் சக்தி இழந்து விரைவில் சோர்ந்து விடுவோம். வெயிலில் அதிக நேரம் செலவிட்டால் உடலில் நீர் வற்றி சன் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட வெயில்காலத்தில் ஏன் மாம்பழம் விளைகிறது? மாங்காயும், மாங்காய் சாறும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
அதனால் சன் ஸ்ட்ரோக் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் மாம்பழங்கள் உடனடி சக்தியைத் தரக்கூடியவை. நாம் சற்று சோர்ந்திருந்து மயக்கமடையப் போகும் நிலையில் இருந்தாலும் மாம்பழம் சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும். அதனால்தான் மாம்பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்கின்றனர். அது மட்டுமின்றி மாம்பழங்கள் எளிதில்
ஜீரணமாகக் கூடியவை. அதனால் ஜீரணசக்தி சற்று மந்தப்படும் காலமாகிய வெயில் காலத்தில் மாம்பழங்கள் உண்பது மிகவும் நல்லது. தர்பூசணி பழங்கள் கூட வெயில் காலத்திலேயே அதிகம் விளைகிறது. நீர்சத்து நிறைந்த இந்த பழம் நம் உடல் வெயிலால் நீர் சக்தியை இழந்துவிடாமல் பாதுகாக்கிறது.



அடுத்து மழைக்காலம் என எடுத்துக்கொண்டால் செர்ரி, ப்ளம்ஸ், பேரிக்காய், நாகப்பழம் போன்றவை மழைக்காலத்தில் அதிகம் விளையக்கூடியவை. செர்ரி இன பழங்கள் மழைக்கால நோய்கள் கிட்டே நெருங்காமல் பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். நன்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினால் போதும் எனத் தோன்றும். அதுப்போன்ற மந்தத்தன்மையைப் போக்குகிறது இந்தப் பழங்கள். மழைக்கால தலைவலியும் வராமல் தடுக்கும். பேரிக்காய் இன கனிகள் நம் சருமத்தை மழையின் பாதிப்பிலிருந்து பேணிக்காக்கிறது. இப்பழங்களும் நாகப்பழம் போன்றவைகளும் நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுத்து மழைக்கால நோய்களை விரட்டியடிக்கிறது.


பருவக்கால காய்கனிகள்:

ஜனவரி:

காய்கள்: முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, கத்திரிக்காய், தக்காளி, கேரட், முள்ளங்கி, பீட்ரூட், பிராக்கோலி, குடைமிளகாய்.... போன்றவை

பழங்கள்: பப்பாளி, மாதுளம்பழம், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பேஷன் ப்ரூட், பைனாப்பிள்.... போன்றவை

பிப்ரவரி:

காய்கள்: வெந்தயம், கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், பிராக்கோலி, குடைமிளகாய், முருங்கைக்காய்.... போன்றவை

பழங்கள்: சப்போட்டா, பப்பாளி, திராட்சை, மாதுளம்பழம், பைனாப்பிள்.... போன்றவை

மார்ச்:

காய்கள்: பசலைக்கீரை, பூசணிக்காய், வெந்தயம், குடை மிளகாய், கேரட், கோவக்காய்.... போன்றவை

பழங்கள்: தர்பூசணி, மாங்காய், திராட்சை, பைனாப்பிள், வாழைப்பழம்.... போன்றவை

ஏப்ரல்:

காய்கள்: வெண்டக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், கோவக்காய், பாகற்காய், பீன்ஸ்.... போன்றவை

பழங்கள்: மார்ச் மாதத்தில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் பலாப்பழம்

மே:

காய்கள்: கீரை, வெள்ளரிக்காய், சுரைக்காய், கோவக்காய்.... போன்றவை

பழங்கள்: மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, லிச்சி, கருநாவல்பழம், பலா, முலாம்பழம்.... போன்றவை



ஜூன்: 

காய்கள்: கீரை, வெண்டை, வெள்ளரிக்காய், சோளம், குடைமிளகாய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... போன்றவை

பழங்கள்: மாம்பழம்

ஜுலை:

காய்கள்: ஜூன் மாதக் காய்கள் மற்றும் புடலங்காய், பாகற்காய்.... போன்றவை

பழங்கள்: மாம்பழம், செர்ரி, பிளம்ஸ், பேரிக்காய்

ஆகஸ்ட்:

காய்கள்: ஜூன் மாதத்திற்கான காய்கள்

பழங்கள்: ஜூன் மாதத்திற்கான காய்கள் மற்றும் சீதாப்பழம்



செப்டம்பர்: 

காய்கள்: ஜூன் மாதத்திற்கான காய்கள்

பழங்கள்: கொய்யா, பப்பாளி, மாதுளை, சீதாப்பழம், பேஷன் ப்ரூட்

அக்டோபர்:

காய்கள்: கத்திரிக்காய், தக்காளி, வெந்தயம், வெங்காய தாள்

பழங்கள்: செப்டம்பர் மாதத்திற்கான பழங்கள்

நவம்பர்:

காய்கள்: அக்டோபர் மாதத்திற்கான காய்கள்

பழங்கள்: ஆரஞ்சு, பேரிச்சைப்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, சீதாப்பழம்.... போன்றவை



டிசம்பர்:

காய்கள்: அக்டோபர் மாதத்திற்கான காய்கள் மற்றும் முள்ளங்கி, பீட்ரூட், சேனைக்கிழங்கு

பழங்கள்: ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, அத்திப்பழம், பைனாப்பிள், சீதாப்பழம்.... போன்றவை


நாம் வேண்டுமானால் ஏதேதோ காரணங்கள் கண்டுபிடித்து இயற்கையை மதிக்காமல் இருக்கலாம். அழித்துக் கொண்டும் இருக்கலாம். ஆனால் இயற்கை நமக்கு நன்மையே அளிக்கிறது.  அதனால் நாம் நம் மூளையையேப் பயன்படுத்தாமல் (அல்லது பயன்படுத்தி) கண்களை மூடியவாறு தைரியமாக அந்தந்த காலகட்டத்தில் விளையும் காய்கனிகளை உண்டு வந்தாலேப் போதும். அந்தந்த பருவக்காலத்தில் தொற்றக்கூடிய நோய்களிலுருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

-எல்லோரா விஜயா

No comments:

Post a Comment