Tuesday 29 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 10

பாசுரம் 10



"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். "

பொருள்:

பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.

விளக்கம்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

No comments:

Post a Comment