Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 28

பாசுரம் 28



"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று காடுகளில் நாங்கள் ஒன்று கூடி உண்போம்.அதிகம் அறிவை பெறாத ஆயர்குலத்தை சேர்ந்தவர்களான எங்களுள் ஒருவனாக நீ பிறந்த புண்ணியம் செய்தவர்கள் நாங்கள். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே நமக்குள் இருக்கும் இந்த உறவானது உன்னாலும், எங்களாலும் என்றும் ஒழிக்க முடியாதது. ஒன்றும் அறியாத பிள்ளைகளான நாங்கள் அன்பினால் உன்னை சிறு பெயரிட்டு அழைத்தால் எங்கள் மீது கோபம் கொள்ளாதே இறைவனே! நாங்கள் வேண்டும் பறை எங்களுக்கு அளிப்பாயாக.

விளக்கம்:

இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

1 comment: