Monday 11 January 2016

முதுமையில் இளமை

முதுமையில் இளமை




வயது ஏற ஏற நோய்களும் வந்து சேரும். 40 வயதைத் தாண்டினாலே சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு என விதவிதமான நோய்கள் வர ஆரம்பித்துவிடும். இப்பொழுது இன்னும் நல்ல முன்னேற்றமடைந்து 20 களிலேயே வர ஆரம்பித்துவிட்டது.

"என்ன பண்றது? வயசாச்சு. வயசான எல்லா வியாதியும் வரத்தானே செய்யும்?" என சலித்துக்கொண்டு நோயுடன் வாழப் பழகிக் கொண்டுவிடுகின்றனர். நோய்கள் வர முக்கியக் காரணம்



முதுமை அல்ல. நம் வாழ்க்கை முறை. பெரும்பாலானோர் வயதானதும் தான் முதுமையைப் பற்றியே சிந்திக்கின்றனர். அதற்கு மாறாக இளவயதிலேயே சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நாம் வேலைக்கு சேர்ந்த மறுநாளே எதிர்காலத்திற்காக சேமிக்கிறோம். அது சரி எனும்போது இளமையில் முதுமையைப் பற்றி சிந்தித்தால் தவறில்லை.

இக்குறிப்புகள் நான் புத்தகத்தில் இணையதளங்களில் படித்து அறிந்துக் கொண்டது மட்டுமில்லை. என் வீட்டில் உள்ள வயதானவர்களை பல காரணங்களுக்காக மருத்துவரிடம் அழைத்து செல்லும்போது அவர்கள் கூறிய அறிவுரைகளும் இதில் அடக்கம். இவை பொதுவாக எல்லோரும் அறிந்ததே, இருப்பினும் ஞாபகப்படுத்துவதுப் போல் ஒரு தொகுப்பு.

1. நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் தேவை.

2. கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இப்பதார்த்தங்களை தினமும் அல்லது அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் கெடுதல் தரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்றாவது ஒருநாள் அளவாக சாப்பிடலாம். அதற்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை.

3. உணவுக் கட்டுப்பாடு என்றதும் அரிசிக்கு பதில் கோதுமை சேர்த்துக்கொண்டால் சகல நலன்களும் வந்துவிடும் என பலர் நம்புகின்றனர். அரிசியோ, கோதுமையோ அதனால் மட்டும் எந்த மாற்றமும் வந்து விடாது. பின்னர் ஏன் சப்பாத்தியைப் பரிந்துரைக்கின்றனர்?

நாம் சிறு வயதிலிருந்தே அரிசிச் சோறு உண்டு வளர்ந்தவர்கள். நாம் நன்கு பழக்கப்பட்டு உண்ணும் உணவு என்பதால் மிக விரும்பி ஒரு வெட்டு வெட்டி விடுவோம். ஆனால் சப்பாத்தியோ அந்நிய உணவு. ஓரளவிற்கு மேல் நம் தொண்டையில் இறங்காது. அதனாலேயே சர்க்கரை வியாதி வந்தவர்களை சப்பாத்தி சாப்பிட சொல்லுகின்றனர். மற்றபடி எந்த தானியமாக இருந்தாலும் அதன் அளவை விட இருமடங்கு காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4. சுருக்கமாக சொன்னால் நம் தென்னிந்திய பாரம்பரிய உணவே நமக்கு ஏற்ற வகையில்தான் உள்ளது. அதாவது ஒரு பொரியல், ஒரு கூட்டு, சாம்பார், ரசம், மோர். இரு வகையான காய்களும், பருப்பு சாம்பாரும் உண்டவுடன் நம் பசி அடங்கிவிடும், ரசத்திற்கும் மோருக்கும் அதிக அரிசிச் சோறு தேவைப்படாது. இப்படி திட்டமிட்டு உள்ள நம் உணவுமுறையே சிறந்தது. அதைப் பின்பற்றினாலேப் போதுமானது.



5. நம்மைப் பலவிதமான நோய்கள் அண்டாமல் பாதுகாப்பது நாம் குடிக்கும் திரவ உணவுகள்தான். அதிலும் குறிப்பாக தண்ணீர். ஒரு நாளுக்கு 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் நம் உடலில் கொழுப்பு, நச்சுப்பொருட்கள் என தேவையில்லாதவை சேர இடம்தராமல் வெளியேற்றி விடும். இதனால் பெரும்பாலான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. ஓடும் நீரில் குப்பை சேராது அல்லவா!

6. பழச்சாறுகளும் அருந்தலாம். இருப்பினும் சாற்றை விட பழங்களை அப்படியே உட்கொள்ளுதலே சிறந்தது. அதன் முழுப்பலனும் கிடைக்கும்.

7. அடுத்து மிக முக்கியமானது. உடற்பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள், மிதித்தல், யோகா என ஏதாவது ஒன்று நிச்சயம் செய்ய வேண்டும்.

8. யோகா செய்தால் மூச்சிரைக்காது, அந்தளவிற்கு வேர்க்காது என்பதால் அதன் பலன்களையும் குறைத்து எடை போடக்கூடாது. யோகாவில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உள்ளது. இதை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.



9. எந்த வகை பயிற்சியாக இருந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். இரண்டு நாட்கள் செய்துவிட்டு தொப்பையைத் தொட்டுப் பார்ப்பதில் பலன் ஒன்றும் இல்லை. இந்த உடற்பயிற்சிகளால் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களை தவிர்க்கலாம். அல்லது இன்னும் சில வருடங்களுக்கு தள்ளியாவது போடலாம்.

10. முதுமையில் பெரும்பாலும் அனைவரும் சொல்லும் பிரச்சினை, உட்கார்ந்தால் எழ முடிவதில்லை. நின்றால் உட்கார முடிவதில்லை. இதற்கு காரணம் வயது ஏற ஏற உடலின் நெகிழ்வுத்தன்மை குறைந்துப்போவதுதான். இதற்கு ஒரேத் தீர்வு, ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி குறிப்பாக வயதைக் காரணம் காட்டி, வேலைகள் செய்வதைத் தவிர்ப்பதும், உடற்பயிற்சி இல்லாமையும்தான். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க லொங்கு லொங்கு என நடந்தால் மட்டும் போதாது. கை கால் என ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனியாக உடற்பயிற்சிகள் தேவை.

இங்கு நான் உடற்பயிற்சி எனக் குறிப்பிடுவது ஜிம்முக்கு போய் வேர்த்துக் கொட்ட உடற்பயிற்சி செய்து 6 பேக் வைத்துக் கொள்வது அல்ல. சின்ன சின்ன அசைவுகள். இது எவ்வளவு வயதானாலும், செய்யலாம். ஏதேனும் நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்யலாம். ஆனால் எத்தனை வயதானாலும் சோம்பிக் கிடக்கக் கூடாது. ஓரளவாவது நடக்க வேண்டும். உயிர் உள்ள வரை நம்மால் முடிந்த அளவு நடந்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெறும் கஞ்சி யாக இருந்தால் கூட செரிமானம் ஆகும்.

11. அடுத்ததாக ஜீரணக் கோளாறு. வயதானவர்களுக்கு குடல் தளர்ந்துவிடுவதால் அவர்களுக்கு ஜீரணக் கோளாறுகள் வருகின்றன. 30 வயதைக் கடந்தவர்களே உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனும் போது முதியவர்களுக்கு கேட்கவே வேண்டாம். இவர்கள் நிச்சயமாக மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவு உட்கொள்ள வேண்டும். "டாக்டருக்கு என்ன ஏதாச்சும் சொல்லுவாங்க. அதல்லாம் சரிப்பட்டு வருமா?" என குதர்க்கம் பேசி தானாகவே ஒன்று செய்து அவதிப்படுவதை விட மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பது புத்திசாலித்தனம்.

இவர்களில் 2 வகை. ஒன்று மருத்துவர் சொல்லும் எதையும் கேட்காமல் வாய்க்கு பூட்டுப் போடாமல் நினைத்ததை அள்ளி உண்பவர்கள். இவர்களுக்கு நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, கொழுப்பு போன்ற நோய்களும் அதன் பாதிப்புகளும் அதிகம் இருக்கும்.

அடுத்த வகையினர், எதற்கும் அச்சம் இதைச் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது, அதைச் சாப்பிட்டா சளிப் பிடிச்சிக்கும் என ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வயிற்றைக் காயப்போடுபவர்கள்.

இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்காமல் எழுந்து நடக்கக் கூட தெம்பில்லாமல் தள்ளாடிக் கொண்டிருப்பார்கள் தனக்கு எல்லாம் தெரியும் எனும் அதிமேதாவிகள். தனது தள்ளாமைக்கு முதுமையும் நோயும் மட்டும்தான் காரணம் என நம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசித்து ஒழுங்காக உண்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.

12. பசியில்லை அதனால் சாப்பிட மாட்டேன் அல்லது நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என நேரம் கடத்துபவர்கள் சரியான நேரத்திற்கு தேவையான அளவு (மட்டும்) சாப்பிட்டாலே நேரத்திற்கு பசி எடுக்கும்.

13. அடுத்து இது மிக மிக முக்கியமான குறைப்பாடாக நான் கருதும் ஒரு விஷயம். இது குறித்து ஒரு தனி கட்டுரையேக் கூட எழுதலாம். “ஐயோ ஆரஞ்சு பழமா? வேணாம் சளி பிடிச்சிக்கும், திராட்சையா தொண்டைக் கட்டிக்கும். மாம்பழம் சாப்பிட்டா கட்டி வரும்.” இப்படி ஒவ்வொரு பழங்களுக்கும் ஒவ்வொரு காரணங்களை சிலர் வைத்துள்ளனர். ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் சளி வரலாம் ஏனெனில் குளிர்ச்சி தரக் கூடிய பழம். ஆனால் சளி வராமல் தடுக்க தேவையான விட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் அதிகமாக உள்ளது. ஒரு முறை சாப்பிட்டால் சளி வரலாம், இருமுறை, மூன்று முறை சாப்பிடும் போது சளி இருமல் எல்லாமே வரலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் பலன்கள் உடலில் சேர ஆரம்பித்து விடும். நோய் எதிர்ப்பு வரும். பிறகு சளி இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்காது. சளி இருமல் வருவது சாதாரண விஷயம். அதற்கு பயந்து வாழ்நாள் முழுவதும் அற்புதமான பழங்களை உண்ணாமல் தவிர்ப்பதை விட அதைத் தொடர்ந்து சாப்பிட்டு நோய் வராமலும் தடுத்து, சுவையான பழ வகைகளையும் உண்டு மகிழலாம்.



14. எந்த ஒரு நோயாக இருந்தாலும் சுய மருத்துவம் வேண்டவே வேண்டாம். தலை வலிக்கிறதா, அதற்கு ஒரு மாத்திரை, சளி இருமலா அதற்கு ஒரு மாத்திரை, பேதியா அதற்கு ஒன்று. இப்படி எடுத்ததற்கெல்லாம் நாமாக ஒரு மருந்து சாப்பிட்டு வந்தால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தும். “ அதற்காக ஒவ்வொரு முறை தலைவலி வரும்போதும் டாக்டர் வீட்டுக்கு போயிட்டு இருக்க முடியுமா?” என அலுத்துக் கொள்வது புரிகிறது. எப்பொழுதோ ஒரு நாள் நமக்கு தலைவலி வரும்போது நாம் ஒரு பாரசிட்டமால் மாத்திரை போட்டுக் கொள்வது சகஜம்தான். ஆனால் அதே பாரசிட்டமால் மாத்திரையை அடிக்கடி எடுத்துக் கொள்ள நேரிட்டால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

அடிக்கடி தலைவலி அல்லது சளி அல்லது ஜீரணக் கோளாறு அல்லது ஏதேனும் ஒரு நோய்காக அடிக்கடி மாத்திரைகள் உட்கொள்ள நேரிட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ”இது நானா ஒண்ணும் எடுத்துக்கல. இந்த பேதி மாத்திரை 10 வருடத்திற்கு முன்பு டாக்டர் எனக்கு எழுதிக் கொடுத்ததுதான்” என எப்பொழுதோ எழுதிக் கொடுத்ததை எத்தனை வருடங்கள் ஆனாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும்போதெல்லாம் உட்கொள்வது நிச்சயம் தவறு. இதனால் நரம்புகள் பாதிக்கும்.

15. கால்சியம் மாத்திரைகளாக இருந்தாலும் சரி, வைட்டமின் மாத்திரைகளாக இருந்தாலும் சரி மருத்துவரின் அனுமதி இல்லாமல் சாப்பிடவே கூடாது. கால்சியம் சத்து எலும்புகளுக்கு நல்லதுதான். ஆனால் அதிகமானால் சிறுநீரகத்தை பாதிக்கும். வைட்டமின்கள் மிக மிக அத்தியாவசியமானதுதான். ஆனால் ஒரு சில வைட்டமின்களே அதிகமானால் சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். மற்றவை வெளியேறாமல் உடலில் ஆங்காங்கு தேங்கிக் கொள்ளும். அதனால் புற்றுநோய் கூட வரலாம். அதனால் எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அனுமதி இன்றி சாப்பிட வேண்டாம். சுய மருத்துவம் நரம்பு தளர்ச்சி ஏற்படுத்தும்.

16. கடைசி குறிப்பு ஆனால் முக்கியமான குறிப்பு. மனம் விட்டு சிரியுங்கள். பழைய பிரச்சினைகளையே நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருக்காமல் வாய் விட்டு சிரிப்போம். நோய் விட்டுப் போகும்.



இந்த குறிப்புகள் அனைத்தும் படித்து அறிந்தது மட்டுமல்ல. எனக்கும் என் உறவினர்கள் குறிப்பாக வயதானவர்களுக்கு மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளின் தொகுப்பே இது. எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு நொண்டி சாக்கு கண்டுபிடித்து விதாண்டாவாதம் செய்துக் கொண்டிருக்காமல் நம் ஆரோக்கியத்திற்காக நாம் நேரம் ஒதுக்கி இந்த குறிப்புகளை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றி வந்தால் முதுமையிலும்  நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.

2 comments:

  1. Nice article.. Vijaya wheat contains gluten which will makes u permanently diabetic if we consume often. And we have to obtain minerals and vitamins naturally not through medicines. Expose urself to sun in the morning for 20 to 30 mins.

    ReplyDelete