Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 20

பாசுரம் 20



"முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்"

பொருள்:

முப்பத்து மூன்று தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே அவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வலிமையுடையவனே! உன் உறக்கத்திலிருந்து எழுந்திராய்! தன்னிடம் அடைக்கலம் என்று வந்தோரை காப்பவனும்,வலிமையுடையவனும் அவர்களின் பகைவருக்கு துன்பம் கொடுப்பவனுமான தூய்மையானவனே எழுந்திராய்! கலசம் போன்ற மென்மையான முலைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும், அழகிய சிறு இடையினையும் கொண்ட நங்கை நப்பின்னையே! திருமகளே! நீ துயிலெழுந்து வந்து எங்கள் நோன்புக்கு தேவையான விசிறியும்(உக்கமும்),கண்ணாடியும்(தட்டொளி) கொடுத்து உன் மணாளனான கண்ணனும் நாங்களும் நீராட வழி செய்வாயாக!

விளக்கம்: 

கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.

No comments:

Post a Comment