Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 23

பாசுரம் 23



"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மழைக்காலத்தில் மலைக்குகையில் தன் துணையோடு உறங்கி கிடந்த சிங்கமானது விழித்துக் கொண்டு தன் எதிரிகளை அழிக்க, கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்ந்து கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல, காயாம் பூ போன்ற நிறமுடைய நீயும் உன் கோயிலிலிருந்து வெளியே வந்து இங்கு எழுந்தருளி அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் இங்கு வந்துள்ள காரணத்தை கேட்டு எங்களுக்கு அருள் செய்வாயாக!

விளக்கம் :

மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் திப்பொறி பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வரும். அதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. காயாம்பூ போன்ற நிறமுடைய மணிவண்ணா. நீ உன்னுடைய கோவிலில் இருந்து இங்க வா. அழகிய அரியணையில் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு அருள்புரிவாயாக என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

No comments:

Post a Comment