Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 29

பாசுரம் 29



"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அதிகாலைப் பொழுதில் இங்கு வந்து உன்னை வணங்கி உன் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் காரணத்தை கேட்பாயாக! மாடு மேய்க்கும் ஆயர் குலத்தில பிறந்த நீ, நாங்கள் செய்யும் சிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாயாக! கோவிந்தனே நாங்கள் உன்னிடம் அருள் வேண்டி இன்று மட்டும் வரவில்லை இனி என்றும், ஏழேழு பிறவிக்கும் உன்னோடு உறவு கொள்வோம், உனக்கு மட்டும் நாங்கள் பணி செய்வோம், இதை தவிர எங்கள் மற்ற விருப்பங்களை நீ மாற்றி விடு.

விளக்கம்:

அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை.

காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.

No comments:

Post a Comment