Sunday 10 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 17

பாசுரம் 17



"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

பொருள்:

அழகிய ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்!

(இப்பாடலில் யசோதையையும்,கண்ணனையும்,அவன் சகோதரன் பலதேவனையும் எழுப்புகிறாள்)

விளக்கம்: 

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும்" என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

No comments:

Post a Comment