Sunday 10 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 15

பாசுரம் 15



"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இளமை கொண்ட கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு 'சிலுகு சிலுகு என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்' என்று நீ சொல்லவும் 'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'என்று நாங்கள் சொல்ல, 'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்' என்று சொல்லி உடனே எங்களோடு வந்து சேர்ந்துக்கொள். உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எல்லாரும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாயே, இதோ நீயே வந்து எண்ணிக் கொள். வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!

விளக்கம்: 

ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள். ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment