Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 18

பாசுரம் 18



"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்.
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவை திற! பொழுது விடிந்து நாற்புறமும் கோழிகள் கூவுகின்றன, குருக்கத்திக் கொடிகளில்(மாதவி பந்தல்) மீது குயில்கள் அமர்ந்து கூவுவதைக் கேள்!
பந்து பொருந்திய விரல்களை உடையவளே நாங்கள் கண்ணனின் பேர் பாட வந்துள்ளோம். உன் தோள் வளைகள் ஒலி எழுப்ப நீ எழுந்து வந்து, உன் செந்தாமரை கையால் கதவை திறவாய்!

விளக்கம்:
இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். அதனால்தான், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

No comments:

Post a Comment